Archive for ஜூலை, 2010


Love hearts
www.vaikaitamil.tk

கனவுகண்டேன் நான்!

இறுகி கவ்வியிருக்கும்
இரைத்தவளை பாம்பாய்,
எனை பின்னிப்பிணைந்திருந்த
கவலைகள் அனைத்தும்
இடி விழுந்ததாய் பதறியோட
ஒரு கனவுகண்டேன் நான்!

இமைகள் எனும் மயிர் நுனிகளில்
தேங்கி நின்ற கண்ணீர் துளிகள்,
இறுதியாய் என் வருத்தங்களோடு கரைந்தோட
நிரந்தரமாய் ஒரு கனவு கண்டேன்!

இதுதான் வாழ்க்கை..
இப்படித்தான் வாழ்க்கை…
எத்தனைபேர் கூற கேட்டதுண்டு.
அதை இன்று முற்றிலும் புரிந்தவனாய்,
புத்தம் புதிதாய் ஒரு கனவு கண்டேன்!

ஐம்பூதங்களும் அடங்கியதாய்,
என் திசைகளும் என்னசைவில் ஒடுங்கியதாய்,
எனக்குள் நான் இன்னுமொருமுறை புதிதாய்  பிறந்ததாய்
ஒரு கனவு கண்டேன்!

நேற்று வரை,
சென்ற நிமிடம் வரை,
எனக்கே எனக்கென காத்திருந்த கட்டுபாடுகள் அனைத்தும்
மழை நீர் மணலாய் கரைதகர்த்து ஓடியதாய்
ஒரு கனவு கண்டேன்!

இனி வருத்தங்களும் கவலைகளும்,
என்னை அடையாளம் கண்டு கொள்ள போவதில்லை!
கண்ணீர்த்துளிகளும் என்னை உறவு கொண்டாட போவதில்லை!
அனைத்தும் கரைந்துவிட்ட கற்பூரமாய்
இனி காற்றோடு கரையலாம்!
அதோ,
என் பிண்டம் வைத்து எரிக்கப்படும்
அந்த விறகு கட்டைகளின் சாம்பலோடு..
காற்றோடு கள்ளமொழி பேசும் அந்த புகையோடு..!

“ஆம்! நான் கண்ட கனவு சொல்லிச் சென்றது இது தான்!
வருத்தங்கள் …  மனிதனின் குருதியோடு கலந்த கருப்பு அணுக்கள்..”


நன்றிகளுடன்,
வி.பி.மறவன்!

கவலைகளின் மீது
கல்லெறியக் கற்றுக் கொண்டேன்.

நேற்றுவரை
என் இதயத்துக்குள் விழுந்த
இனிய நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு
சோகத்தை மட்டுமே
ஓட விட்டிருந்தேன் மனதின் பாதைகளில்.

புரிந்து விட்டது…
வாழ்க்கை என்பது
கவலை ஆணிகளால் நெய்யப்படும்
சவப்பெட்டி அல்ல.

அதோ
அந்த நீள் கடலின்
சிறு துளி நான்…

இதோ
இந்த மணல் மேட்டின்
ஒரு அணு நான்…

என் கரங்களின் ரேகையைப்
பிடுங்கி விட்டு
பூமத்திய ரேகையைப்
புகுத்த முடியாது.

அழுத்தமாய் இழுத்தாலும்
அட்சக்கோடுகள்
அறுந்து விழப்போவதில்லை !!!

துருவங்களுக்குத்
திருகாணி மாட்டி
உலக உருண்டையை என்
மேஜை மீது மாட்ட முடியாது.

விரையும் வினாடிகளில்,
நடக்கும் நிமிடங்களில்,
நகரும் நாட்களில்,
நான் தேடிக்கொண்டிருப்பதாய் நினைத்து
தொலைத்தவை தான் அதிகம்

ரசிக்கக் கற்றுக் கொண்டேன்
அதிகாலையில் ஜன்னல் திறந்ததும்
முகத்தை முத்தமிடும்
அந்த பனிக்காற்று முதல்…
அந்தியில்
முச்சந்தியில்
அவிழ்க்கப்படும் அரட்டைகள் வரை…

பூ தேடி
அலைவதை நிறுத்திய பின்
புரிகிறது
நிற்குமிடமே நந்தவனத்தின்
நடுப்பாகம் என்பது.

இப்போதெல்லாம்
இரவுப் படுக்கையின் இரண்டு பக்கமும்
சந்தோஷங்கள் மட்டுமே
சேமித்து வைக்கிறேன்…

கவலைக் கற்களைக் கொண்டு
சுய கல்லறை கட்டிக் கொள்வதை
நிறுத்தியபின்
சாயம் பூசா சம்பா அரிசிபோல
சோக மூட்டைகள்
கழனிகளுக்கே திரும்பிவிடுகின்றன..

Follow

Get every new post delivered to your Inbox.