கருப்பு அணுக்கள்!

கனவுகண்டேன் நான்!

இறுகி கவ்வியிருக்கும்
இரைத்தவளை பாம்பாய்,
எனை பின்னிப்பிணைந்திருந்த
கவலைகள் அனைத்தும்
இடி விழுந்ததாய் பதறியோட
ஒரு கனவுகண்டேன் நான்!

இமைகள் எனும் மயிர் நுனிகளில்
தேங்கி நின்ற கண்ணீர் துளிகள்,
இறுதியாய் என் வருத்தங்களோடு கரைந்தோட
நிரந்தரமாய் ஒரு கனவு கண்டேன்!

இதுதான் வாழ்க்கை..
இப்படித்தான் வாழ்க்கை…
எத்தனைபேர் கூற கேட்டதுண்டு.
அதை இன்று முற்றிலும் புரிந்தவனாய்,
புத்தம் புதிதாய் ஒரு கனவு கண்டேன்!

ஐம்பூதங்களும் அடங்கியதாய்,
என் திசைகளும் என்னசைவில் ஒடுங்கியதாய்,
எனக்குள் நான் இன்னுமொருமுறை புதிதாய்  பிறந்ததாய்
ஒரு கனவு கண்டேன்!

நேற்று வரை,
சென்ற நிமிடம் வரை,
எனக்கே எனக்கென காத்திருந்த கட்டுபாடுகள் அனைத்தும்
மழை நீர் மணலாய் கரைதகர்த்து ஓடியதாய்
ஒரு கனவு கண்டேன்!

இனி வருத்தங்களும் கவலைகளும்,
என்னை அடையாளம் கண்டு கொள்ள போவதில்லை!
கண்ணீர்த்துளிகளும் என்னை உறவு கொண்டாட போவதில்லை!
அனைத்தும் கரைந்துவிட்ட கற்பூரமாய்
இனி காற்றோடு கரையலாம்!
அதோ,
என் பிண்டம் வைத்து எரிக்கப்படும்
அந்த விறகு கட்டைகளின் சாம்பலோடு..
காற்றோடு கள்ளமொழி பேசும் அந்த புகையோடு..!

“ஆம்! நான் கண்ட கனவு சொல்லிச் சென்றது இது தான்!
வருத்தங்கள் …  மனிதனின் குருதியோடு கலந்த கருப்பு அணுக்கள்..”


நன்றிகளுடன்,
வி.பி.மறவன்!

நீள் கடலின் சிறு துளி நான்…

கவலைகளின் மீது
கல்லெறியக் கற்றுக் கொண்டேன்.

நேற்றுவரை
என் இதயத்துக்குள் விழுந்த
இனிய நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு
சோகத்தை மட்டுமே
ஓட விட்டிருந்தேன் மனதின் பாதைகளில்.

புரிந்து விட்டது…
வாழ்க்கை என்பது
கவலை ஆணிகளால் நெய்யப்படும்
சவப்பெட்டி அல்ல.

அதோ
அந்த நீள் கடலின்
சிறு துளி நான்…

இதோ
இந்த மணல் மேட்டின்
ஒரு அணு நான்…

என் கரங்களின் ரேகையைப்
பிடுங்கி விட்டு
பூமத்திய ரேகையைப்
புகுத்த முடியாது.

அழுத்தமாய் இழுத்தாலும்
அட்சக்கோடுகள்
அறுந்து விழப்போவதில்லை !!!

துருவங்களுக்குத்
திருகாணி மாட்டி
உலக உருண்டையை என்
மேஜை மீது மாட்ட முடியாது.

விரையும் வினாடிகளில்,
நடக்கும் நிமிடங்களில்,
நகரும் நாட்களில்,
நான் தேடிக்கொண்டிருப்பதாய் நினைத்து
தொலைத்தவை தான் அதிகம்

ரசிக்கக் கற்றுக் கொண்டேன்
அதிகாலையில் ஜன்னல் திறந்ததும்
முகத்தை முத்தமிடும்
அந்த பனிக்காற்று முதல்…
அந்தியில்
முச்சந்தியில்
அவிழ்க்கப்படும் அரட்டைகள் வரை…

பூ தேடி
அலைவதை நிறுத்திய பின்
புரிகிறது
நிற்குமிடமே நந்தவனத்தின்
நடுப்பாகம் என்பது.

இப்போதெல்லாம்
இரவுப் படுக்கையின் இரண்டு பக்கமும்
சந்தோஷங்கள் மட்டுமே
சேமித்து வைக்கிறேன்…

கவலைக் கற்களைக் கொண்டு
சுய கல்லறை கட்டிக் கொள்வதை
நிறுத்தியபின்
சாயம் பூசா சம்பா அரிசிபோல
சோக மூட்டைகள்
கழனிகளுக்கே திரும்பிவிடுகின்றன..

தேவை இல்லை அன்னையர் தினம்!

எனக்குத்தேவையில்லை தனியொரு தினம்!


என்னுடல் வளர்க்க

உன்னுடல் இம்சித்தாய்..

அன்னையே !

ஈரைந்து மதங்கள்

என் கருவையே சுவாசித்தாய்..

உன் வம்சம் என்னையே

உலகுக்கு ஈன்றெடுததாய்..



வெளி சொல்இயலா வழியிலே

உன்னையே ஒப்புக்கொடுத்தாய்..

என் பிண்டம் வளரவே

உன் மார்பில் இடம் கொடுத்தாய்..

எத்தனை நாளாய் நீ

இரவும் பகலும் விழித்திருந்தாய்!



உன்கைகள் ஓடியவே

தொட்டிலதை தாலாட்டி,

உன் செவ்வாய் இதழ்வழிக்க

இராகங்கள் நீ பாடி,

எத்தனை கடமையிலும்

என்மீது கண்வைத்து,

ஏதேனும் அருந்தும்முன்

ஒருமுறை நீ சுவைத்து,

ஏதேனும் யாராலும்

இடித்தாலும் கடிந்தாலும்

என்கண்கள் நீர்வழிய

உன் தோல்கள் இடம்கொடுத்து..

என்றுமே எனக்காக

நீ இருந்தாய் என்அன்னையே!



என்முதல் தவரலில்

ஓடிவந்து கட்டி அனைத்து,

என்கால்கள் எட்டுவைக்க

உன்முத்தம் தொட்டுவைத்து,

என்வாய் மொழியுரைக்க

உன்வாய் உச்சிமுகர்ந்து,

எத்தனை சந்தோசம்

என்அன்னையே உன்முகமதனில்!


என்பள்ளிப்பாடமதில்

என்றுமே பின்னேற்றம்..

என்கல்லூரி நாட்களிலும்

ஏதோ ஒரு திண்டாட்டம்..

என் வாழ்வின் தொடக்கத்தில்

அன்றுமாய் கலியாட்டம்!

அத்தனைக்கும் புன்னகைத்து

எனக்கேதெரியாமல்

முழுதுமாய் தோல்கொடுத்து,

என் ஒவ்வொரு அணுவிலும்

கலந்த என்னுயிர் அன்னையே..

எப்படி மறப்பேன்

ஒருநொடியிலும் நின்னையே!!!


எனக்குத்தேவையில்லை தனியொரு தினம்!



இக்கவிதையை இவ்வுலக அன்னையர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.